Wednesday 23 September 2009

18. பட்டம் துறந்த கதை

ஈ.வெ.ரா.வுக்கும், காந்திஜிக்குமிடையே நடைபெற்ற உரையாடல் சுவையானதாகும். அதன் ஒரு பகுதியை இங்கே காணலாம்.

ஈ.வெ.ரா.: இந்து மதம் மறைய வேண்டும்.

காந்தி: ஏன்?

ஈ.வெ.ரா.: இந்து மதம் என்று எதுவும் கிடையாது.

காந்தி: இருக்கிறது.

ஈ.வெ.ரா.: அது பிராமணர்கள் உருவாக்கிய பிரமை.

காந்தி: அனைத்து மதங்களும் அதைப் போன்றதுதான்.

ஈ.வெ.ரா.: இல்லை. இதர மதங்களுக்கு வரலாறு, லட்சியங்கள், கோட்பாடுகள் உள்ளன. மக்கள் அவைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

காந்தி: இந்து மதத்தில் அத்தகையது எதுவும் இல்லையா?

ஈ.வெ.ரா.: சொல்வதற்கு என்ன இருக்கிறது? பிராமணன், சூத்திரன், வைசியன் போன்ற சாதீய உட்கூறுகள் தவிர அதில் வேறெந்த விதியோ, சான்றோ கிடையாது.

காந்தி: அது குறைந்தபட்சம் இந்தக் கோட்பாட்டைக் கொண்டுள்ளது.

ஈ.வெ.ரா.: இருந்தும் என்ன பயன்? அதன்படி பிராமணர்கள் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள். நீங்களும், நானும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள்.

காந்தி: நீங்கள் சொல்வது தவறு. வர்ணாசிரம தர்மத்தில் தாழ்ந்த சாதி என்றும், உயர்ந்த சாதி என்றும் எவ்வித தாரதம்மியமும் கிடையாது.

ஈ.வெ.ரா.: நீங்கள் இதைச் சொல்லலாம். ஆனால் நடைமுறையில் அது வேறுவிதமாக இருக்க முடியாது.

காந்தி: இல்லை. சமத்துவம் இருக்கிறது.

ஈ.வெ.ரா.: இந்துமதம் இருக்கும் வரை இதை யாரும் பெற முடியாது.

காந்தி: இந்துமதத்தின் மூலமாக எவரும் இதைப் பெற முடியும்.

ஈ.வெ.ரா.: அப்படியானால் பிராமணர்- சூத்திரர் வேறுபாட்டை நிரூபிக்கும் மதச்சான்றுகள் குறித்து என்ன சொல்வது?

காந்தி: இந்து மதம் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு சான்றுகள் இல்லை என்றுதானே நீங்கள் வாதாடுகிறீர்கள்?

ஈ.வெ.ரா.: மதம் என்று எதுவும் கிடையாது. எனவே அதை நிரூபிக்கச் சான்றுகளும் கிடையாது என்றுதான் நான் சொல்லி வருகிறேன். மதம் இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டால், அதை நிரூபிக்கும் சாட்சியங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காந்தி: நாம் மதத்தை ஏற்றுக் கொண்டு சான்றுகளை உருவாகிக்கொள்ளலாம்.

ஈ.வெ.ரா.: அது சாத்தியமற்றது. மதம் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால் நாம் எதையும் மாற்ற முடியாது அல்லது மாற்றியமைக்கவும் முடியாது.

காந்தி: இதர மதங்களைப் பொறுத்தவரை நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், இந்து மதத்தைப் பொறுத்தவரை சரியல்ல. அதை ஏற்றுக் கொண்டபின் அதன் பெயரால் நீங்கள் எதையும் செய்ய முடியும். அதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.

ஈ.வெ.ரா.: நீங்கள் இதை எப்படிச் சொல்ல முடியும்? யார் அதை ஏற்றுக் கொள்வார்கள்? அதில் நீங்கள் முன்னோடிப் பங்கை ஆற்ற முடியுமா?

காந்தி: நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். இந்து மதம் என்று எதுவுமில்லையென்று நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கென்று திட்டவட்டமான விதி இல்லையென்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால்தான் இந்துக்கள் என்று நம்மை நாம் கூறிக்கொள்வதின் மூலம் நாம் விரும்பும் முறையில் அதற்காக பொதுவான லட்சியங்களை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும். இந்து மதம் மட்டுமே மக்களை நல்ல வழிகளுக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதை நான் உறுதியாகக் கூற முடியும்; ஏனென்றால் இதர மதங்களுக்கென்று கோட்பாடு, வரலாறு மற்றும் இதர சான்றுகள் உள்ளன; அதை யாராவது மாற்றினால் ஒழிக்கப்பட்டே விடுவார்கள்; கிறிஸ்துவர்கள் ஏசுநாதர் கூறியபடி நடந்து கொள்ள வேண்டும். அதேபோன்று முஸ்லீம்கள், முகம்மது நபியும், குரானும் சொல்வது போல வாழ வேண்டும். அதை மாற்றுவதற்கு ஏதேனும் முயற்சி செய்யப்படுமேயானால் அது மதத்தின் கட்டளைகளுக்கு மாறானதாகும். அவ்வாறு இல்லை என்று கூறுபவர்கள் மதத்துக்கு வெளியே வந்து பிரகடனம் செய்யலாம்; ஆனால் உள்ளிருந்து கொண்டே, அதை மறுக்க முடியாது. இதர மதங்களின் உண்மையான நிலமை இதுதான். ஆனால், அவர்களைப் போல் அல்லாது இந்து கோட்பாட்டில் எவர் ஒருவரும் முன்னால் வந்து தயக்கமின்றி எதையும் போதிக்க முடியும். இந்து மதத்திலிருந்து பல மகத்தான மனிதர்கள் தோன்றி, பல விஷயங்களைக் கூறியுள்ளனர். எனவே இந்து மதத்தில் இருக்கும்பொழுதே, நாம் அதை மாற்ற முடியும். மனிதகுலத்தின் நன்மைக்காக பல விஷயங்களைச் செய்ய முடியும்.

ஈ.வெ.ரா.: மன்னிக்கவும். அதைச் செய்ய முடியாது.

காந்தி: ஏன்?

ஈ.வெ.ரா.: இந்து மதத்திலுள்ள சுயநலக் கும்பல் அவ்வாறு செய்ய உங்களை அனுமதிக்காது.

காந்தி: நீங்கள் ஏன் இவ்வாறு கருத வேண்டும்? இந்து கோட்பாட்டில் தீண்டாமை இல்லையென்ற அம்சத்தை இந்துக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

ஈ.வெ.ரா.: கொள்கையை ஏற்றுக் கொள்வதிலும், அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதிலும் வித்யாசம் உண்டு. எனவே அதை கடைபிடிப்பது சிரமமானதாகும்.

காந்தி: நான் அதைச் செய்கிறேன். கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதை நீங்கள் கண்டீர்களா?

ஈ.வெ.ரா.: நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை. அதெல்லாம் உங்கள் செல்வாக்கினாலும், அவர்களுக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டிய அவசியத்தினாலும் ஏற்பட்டது என்பதுடன் சுயநலத்தின் காரணமாக நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வது போல் நடிக்கிறார்கள். அதற்குப் பதிலாக நீங்கள் அவர்களை நம்புகிறீர்கள்.

காந்தி: (சிரித்துக் கொண்டே) யார் அவர்கள்?

ஈ.வெ.ரா.: பிராமணர்கள் அனைவரும்.

காந்தி: உண்மையிலேயா?

ஈ.வெ.ரா: ஆம்.

காந்தி: உண்மையாகவா?

ஈ.வெ.ரா.: ஆம். அந்த விஷயத்தில் உங்களோடு கூட வரும் பிராமணர்கள் அனைவரும்.

காந்தி: அப்படியானால் எந்த பிராமணரையும் நீங்கள் நம்புவதில்லையா?

ஈ.வெ.ரா.: என்னை ஈர்ப்பதில் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர்.

காந்தி: ராஜகோபாலாச்சாரியைக் கூட நீங்கள் நம்புவதில்லையா?

ஈ.வெ.ரா.: அவர் நல்லவர், நேர்மையானவர், தியாகம் செய்யும் மனிதர். ஆனால் இந்த நற்குணங்கள் அனைத்தும் அவர் சமூகத்திற்கு சேவை செய்ய அவருக்கு உதவுகிறது. அவர் சுயநலம் அற்றவர். ஆனால் நான் என் சமூகத்தின் நலனை அவருடைய நலன்களுக்கு அடகு வைக்க முடியாது.

காந்தி: இதைக் கேட்க வியப்பாக இருக்கிறது. பிரச்சனை அதுதான் என்றால், உலகில் ஒரு நேர்மையான பிராமணனை தேடிக் கண்டுபிடிப்பது என்பது மிகுந்த சிரமமானது என்பதுதான் உங்கள் கருத்தா?

ஈ.வெ.ரா.: இருக்கலாம், அல்லது இல்லாமலிருக்கலாம். நான் யாரையும் பார்க்கவில்லை.

காந்தி: அவ்வாறு சொல்லாதீர்கள். நான் ஒரு பிராமணனை பார்த்தேன். அவர் ஒரு சிறந்த பிராமணர் என்றே இன்றும் கருதுகிறேன். அவர்தான் கிருஷ்ண கோகலே.

ஈ.வெ.ரா.: ஓ ! உங்களைப் போன்ற மகாத்மாவுக்கு இந்த உலகத்தில் ஒரே ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது சாத்தியமாகியிருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற சாதாரணமான பாவிகளுக்கு ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது எவ்வாறு சாத்தியமாகும்?

காந்தி: (சிரித்துக் கொண்டே) உலகமானது எப்பொழுதும் அறிவுஜீவிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. பிராமணர்கள் படித்த மக்கள். அவர்கள் என்றென்றும் இதரர்கள் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவார்கள். எனவே, அவர்களை விமர்சிப்பதால் எவ்வித பயனுள்ள காரியமும் ஏற்படப் போவதில்லை. இதரர்களும் அந்த மட்டத்தை அடைய வேண்டும்.

ஈ.வெ.ரா.: இதர மதங்களில் இத்தகைய மனிதர்களை நாம் காண முடிவதில்லை. இங்கே இந்த மதத்தில் மட்டுமே பிராமணர்கள் அறிவுஜீவிப் பகுதியை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். மீதமுள்ள 90 சதவீதத்தினர் கல்வியறிவு அற்றவர்களாகவோ அல்லது அப்பாவிகளாகவோ இருக்கிறார்கள். அனவே ஒரு சமூகத்தில் ஒரு பகுதி மக்கள் மட்டுமே அறிவு ஜீவிகளாகவும், படித்த குழுவாகவும் இருப்பது அந்த சமூகத்திலுள்ள இதர பகுதி மக்களின் நல்வாழ்வுக்கு ஊறு விளைவிக்கக்கூடியது இல்லையா? எனவேதான், இந்த நிலமைக்கு பிரதான காரணமாக உள்ள மதம் என்பது தொலைந்து போக வேண்டும் என நான் தொடர்ச்சியாகக் கூறி வருகிறேன்.

காந்தி: உங்கள் நிலைப்பாடு என்ன? இந்து மதத்தையும் அதைப்போன்ற சமூகத்திலிருந்து பிராமணர்களையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக நீங்கள் நிற்கிறீர்கள் என்று நான் கருதலாமா?

ஈ.வெ.ரா.: போலித்தனமான இந்து மதம் ஒழிந்தால், பிராமணர் எவரும் இருக்கமாட்டார். நாம் சூத்திரர் வருணத்தைச் சேர்ந்தவர்கள் அனைத்துமே பிராமணர் பிடியில்தான் உள்ளன.

காந்தி: அது சரியல்ல. அவர்கள் இப்போது நான் கூறுவதை கேட்க மாட்டார்களா? இந்தக் கோட்பாட்டின் கீழ் ஒன்று பட்டுள்ள நாம் அதனுடைய எதிர்மறையான அம்சங்களை இப்பொழுதும் அகற்ற முடியும்.

ஈ.வெ.ரா.: இதை நீங்கள் சாதிக்க முடியாது என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. அப்படி நீங்கள் சாதிக்க முடிந்தாலும், எதிர் காலத்தில் உங்களைப் போன்ற சில மகத்தான மனிதர்கள் தோன்றி நீங்கள் செய்த வேலையை மாற்றிவிடுவார்கள்.

காந்தி: அது எவ்வாறு சாத்தியம்?

ஈ.வெ.ரா.: நீங்கள் முன்பு கூறியது போல, இந்து மதத்தின் பெயரால் எவர் ஒருவரும் தன்னுடைய சிந்தனை வழிக்கேற்ப மக்களைக் கொண்டுவர முடியும். அதே வழியில் நாளை தோன்றக் கூடிய ஒரு மகத்தான மனிதன் இந்துக் கோட்பாட்டின் பெயரால் எதையும் செய்ய முடியும்.

காந்தி: எதிர்காலத்தில் எவரொருவரும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் முயற்சி நடைமுறைச் சாத்தியமற்றது இல்லையா?

ஈ.வெ.ரா.: இ தைக் கூறுவதற்கு என்னை மன்னிக்கவேண்டும். இந்து மதத்தின் உதவியோடு ஸ்தூலமாக எதையும் செய்வது உங்களுக்குச் சாத்தியமற்றது. மாற்றத்தைச் செய்ய பிராமணர்கள் உங்களை விட மாட்டார்கள். அவர்களுடைய நலன்களுக்கு எதிராக நீங்கள் வேலை செய்வதாக அவர்களுக்குத் தெரிந்தால், உங்களை எதிர்த்துப் போராடத் துவங்கி விடுவார்கள். அத்தகையதொரு மாற்றத்தைச் செய்ய இதுவரை எந்த மகத்தான மனிதரும் முயற்சிக்கவில்லை. யாராவது அதற்காக முயற்சித்தால் பிராமணர்கள் அவரைச் சும்மா விட மாட்டார்கள்.

காந்தி: நீங்கள் பிராமணர்களுக்கெதிராக வெறுப்பைக் கொண்டுள்ளீர்கள். அதுதான் உங்கள் சிந்தனையில் பிரதானமாக நிற்கிறது. நம்முடைய விவாதம் மூலம் நாம் இதுவரை எவ்வித உடன்பாட்டுக்கும் வரவில்லை. எனினும் எதிர்காலத்தில் இரண்டு அல்லது மூன்று முறை நாம் சந்தித்துப் பேசுவோம். நமது நிலை குறித்து தீர்மானிப்போம். (நன்றி- ஈ.வெ.ரா.பெரியார் வாழ்வும் பணியும்)

காந்தியை பார்த்து விட்டு திரும்பிய பின் முதல் வேலையாக ராமசாமி செய்த காரியம் என்ன தெரியுமா? நாடே தலையில் தூக்கி வைத்து வைத்துக்கொண்ட்டாடிக்கொண்டிருந்த மகாத்மா காந்தியை தன் பத்திரிக்கைகளில் ‘ஸ்ரீமான் காந்தி' என்றே குறிப்பிடலானார். அதோடு பத்திரிக்கையின் முகப்பில் இருந்த ராமசாமி நாயக்கர் என்ற பெயரில் இருந்த நாயக்கரையும் எடுத்து விட்டு, ஈ.வெ.ராமசாமி என்று போடத்தொடங்கினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தனது குடியரசு நாளிதழில் பிராமணர்களின் உயர்வு வேசம் பொய் என்று எழுதத்தொடங்கினார் ஈ.வெ.ரா. ஒருவன் தன்னைத் தான் உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளுவதையும், மற்றவர்களை தாழ்வானவர்கள் என்று பிரகடனப்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக பேசியும், எழுதியும் வரலானார் ஈ.வெ.ரா. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருவதோடு, பிராமனர் அல்லாதோர் இயக்கத்திற்கு ஆதரவாகவும் எழுதிவந்தார்.

ஈ.வெ.ரா காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியே வந்துவிட்டாலும், அக்கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யாமலிருந்தார். அதனால் ராமசாமியை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காங்கிரஸ் கட்சி ஒரு குழுவை நியமித்தது. அக்குழு தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஈ.வெ.ராமசாமி பேசிவருவதை கண்டது. பின்னர் தலைமையிடத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது. காங்கிரஸ் விரோத போக்கை கொண்டிருப்பதாகக்கூறி, ஈ.வெ.ராமசாமியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் பறித்துக்கொண்டது காங்கிரஸ்.

இதன் பிறகு ஈ.வெ.ரா இன்னும் சுதந்திரமாக உணர்ந்தார். இனி காந்தி மாதிரியான எந்த தலைவருக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்காது. தொடர்ந்து மக்களிடையே சொற்பொழிவு செய்வது, மனிதப் பிறப்பில் தான் உயர்ந்தவன் என்று சொல்லுவதையும் கண்டித்து எழுதிவந்தார். நீதிக்கட்சியின் கூட்டங்களில் தொடர்ந்து இடம்பெற்றார் ஈ.வெ.ரா.

சில மாதங்களில் சென்னை சட்டமன்றத்திற்கு பொதுத்தேர்தல் வந்தது. அப்போது எந்த கட்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ளாத ராமசாமி தனியாக ஒரு கட்சிக்கு ஆதரவு என்ற நிலைஎடுக்காமல் இருந்தார். ’நல்ல திறமை உடையவர்கள், பார்ப்பனர் அல்லாதவர்கள், மற்ற மனிதனை தாழ்வாக எண்ணாதவர்கள், தன்னலம் காணாது மற்றவர்களுக்கு உழைக்கக்கூடியவர்கள். இவர்களே சட்டசமைக்கு போக தகுதியானவர்கள். இது போன்றோரை மக்கள் தேர்வு செய்தல் வேண்டும்’ என்று தமது பத்திரிக்கையில் எழுதியதோடு ஒதுங்கி நின்று விட்டார் ஈ.வெ.ரா.

தேர்தலில் நீதிகட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. முதலமைச்சராக இருந்த பனகல் அரசர் கூட மிகுந்த சிரமங்களுக்கிடையிலேயே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சியில் பிரிவான சுயராஜ்ய கட்சி பெற்றி பெற்றது. ஆனால் அமைச்சரவை அமைக்கமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்ததால்.. சுயேட்சை உறுப்பினராக வெற்றி பெற்றிருந்த டாக்டர். சுப்பராயன் அமைச்சரவையை அமைத்தார். இவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது.(இச்சமயத்தில் கூட்டு முதல்-மந்திரிகளே தமிழகத்தில் இருந்தனர்) நீதிகட்சி எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது.

தேர்தலில் தோல்வி நீதிகட்சியில் பலருக்கும் அதிர்ச்சியை தந்திருந்தது. அதனால் பல தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் பக்கமே போகலாமெ முடிவு செய்திருந்தார்கள். இந்த சமயத்தில் தான் மதுரையில் நடந்த பிராமணர் அல்லதோர் மாநாடு நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு ஈ.வெ.ராமசாமி பேசினார். அவரின் அனல் பறக்கும் பேச்சு பலருக்கும் நம்பிக்கையைக் கொடுத்தது. நீதிக்கட்சியில் தலைவர்களும் தொண்டர்களும் மிகுந்த உற்சாகமடைந்தார்கள். மதுரையைத்தொடர்ந்து திருநெல்வேலி, கோயம்பத்தூர் போன்ற பல இடங்களிலும் பிராமணர் அல்லதோர் மாநாடுகள் நடத்தப்பட்டன. அக்கூட்டங்களுக்கும் சென்று தமது சுமயரியாதைக்கொள்கைகளை பறைசாற்றும் மேடையாக அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார் ஈ.வெ.ரா.

(தொடரும்) *Download As PDF*

1 comment:

தமிழினியன் said...

பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு (திருத்தப்பட்டு, விரிவாகம் செய்யப்பெற்றது)

தந்தை பெரியார் அவர்களிடம் பதிப்புரிமை பெற்று, வே.ஆனைமுத்து அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, திருச்சி சிந்தனையாளர் கழகத்தாரால் பதிப்பிக்கப்பட்டு, 1.7.1974ல் திருச்சியில், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்ட “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்” நூலின் –திருத்தப்பட்டு விரிவாக்க, செய்யப்பட்ட இரண்டாம் பதிப்பு 2010 பிப்ரவரியில் வெளியிடப்பட உள்ளது.

முந்துவீர் ! முன் பதிவுக்கு !