Monday, 3 August 2009

ஒழுக்கங்கெட்டத் தனத்திற்கு ஒருதலைக் கற்பே காரணமாகும்..

ஒழுக்கங்கெட்டத் தனத்திற்கு ஒருதலைக் கற்பே காரணமாகும்


Periyar E.V.Ramasamy இந்து மதம் என்றும் இந்துக்கள் என்றும் நம்மைச் சொல்லிக் கொண்டு, இந்து மதம் சாஸ்திர புராண சம்பந்தமான விஷயங்களைத் தமிழர் தலையில் சுமத்துவதும், தமிழர்கள் அதற்குக் கட்டுப்படுவதும் நியாயமா? இந்து மதப் புராணங்களில் ‘கற்பு'க்கு லட்சணம் ஒரு பெண் (நளாயினி), தனது புருஷன் குஷ்டரோகியாய் இருந்து கொண்டு தாசி வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொன்னாலும், அவனைக் கழுவி எடுத்துக் கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக் கொண்டு போய் தாசி வீட்டில் வைத்து, விடிந்த பிறகு மறுபடியும் தாசி வீட்டிலிருந்து தன் வீட்டிற்குத் தூக்கிவர வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தை வலியுறுத்துகிற ஒருவன், தன் மகளுக்கு இப்படிப்பட்ட புருஷன் அமைந்து அவன் தன் பெண்ஜாதியை இப்படிச் செய்ய வேண்டுமென்று சொல்லுவானானால், ஒப்புக்கொள்ளுவானா?...

ஆண், பெண் கூட்டு வாழ்க்கையில் இப்போது வழங்கி வரும் கருத்தமைந்த ‘கற்பு' என்னும் வார்த்தையே அவசியமற்றது என்றும், அது வாழ்க்கை இன்பத்திற்குக் கேடு பயக்கின்றதே ஒழிய, அதனால் நன்மை இல்லை என்றும் சொல்லுவேன். இன்று வழங்கும் ‘கற்பு' பெண்களுக்கு மாத்திரமே ஒழிய ஆண்களுக்கு இல்லை. அது, பெண்களை நிர்ப்பந்திப்பது போல் ஆண்களை நிர்ப்பந்திப்பதில்லை. சமுதாயத்தில் ஒழுக்க ஈனம் ஏற்பட்டதற்குக் காரணம், இந்த ஒருதலைக் கற்பேயாகும். பெண்கள் அடிமையாக்கப்பட்டதற்கும் இந்த ஒரு தலைக் கற்பே காரணமாகும். இந்த ஒரு தலைக்கற்பு உள்ளவரை, சமுதாயம் சீர்படப் போவதில்லை என்பதே எனது உறுதி.

ஆண்களின் ஒழுக்க ஈனமான நடத்தைகளை இந்துமதக் கடவுள், சமயம், சாத்திரம், புராணம் ஆகியவை ஒப்புக் கொள்ளுகின்றனவா இல்லையா என்று கேட்கிறேன். இவை கூடாது என்று சொல்லுகிற ஒரு தமிழன், தன்னை இந்து மதத்தைச் சார்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களும் ஒழுக்க ஈனமாக இருக்க வேண்டுமென்று போதிப்பதாகக் கொள்ளக்கூடாது. பெண்களைப் போலவே ஆண்களும், ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் சட்டமோ, சமுதாயமோ செய்ய வேண்டும். செய்யாவிட்டால், சில பெண்களாவது முன் வந்து அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்யத் துணிவதாகவாவது காட்ட வேண்டும். உரிமையில்தான் சுதந்திர உணர்ச்சி இருக்கிறது. அது இல்லாத இடத்தில் அடிமை உணர்ச்சிதான் இருக்கிறது. அதனாலேயே நமது பெண்கள் அடிமைகளானார்கள். அப்பெண்களின் வயிற்றில் பிறந்த நாம் அடிமை வாழ்வு வாழ்கிறோம்...

அநேகம் பேர்களுக்குச் சேர்க்கையால்தான் பிள்ளைப் பேறு கர்ப்பம் உண்டாகின்றது என்பதுகூடத் தெரியாது. ‘ஏதோ கடவுள் கொடுக்கிறார். கடவுள் வயிற்றில் கொண்டு விடுகிறார். கடவுளே வளர்க்கிறார். கடவுளே பெற்ற பின்பும் நோய் உண்டாக்குகிறார். கடவுளே சாகடிக்கிறார்' என்று கருதிக் கொண்டு, இது விஷயங்களில் மிருகங்களைவிட கேவலமாய் நடந்து கொள்ளுகிறார்கள். சேர்க்கை விஷயம் அது சம்பந்தமான உடல்கூறு ஆகியவைகளைப் பற்றித் தெரிவது, வெகு கேவலமாக இங்கு பேசப்படுகிறது. கதைகளில், புராணங்களில் நாடகத்தில் பச்சை பச்சையாய்க் கேட்கிறபோதும், பார்க்கிறபோதும் ஆனந்தக் கூத்தாடுகிறோம்.

அந்தக் கலைகளை நமது ஆண் - பெண் இருபாலருமே ஓர் அளவுக்காவது தெரிந்து இருக்க வேண்டும். அது தெரிந்து கொள்ளாமல் வெறும் மிருகப் பிராயமாய் இருப்பதாலேயே அநேக நோய், சாவு, ஊனம், மனச்சஞ்சலம், பொருந்தா வாழ்வு ஆகியவை பெருகுகின்றன. குழந்தைகள் பெறுவதில் கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும், குழந்தை பிறந்த பிறகு எப்படி இருக்க வேண்டும், எத்தனை நாள் பொறுத்து மறுபடியும் கர்ப்பம் தரிக்க இடம் கொடுக்க வேண்டும் என்பவைகளையாவது ஒவ்வொரு பெண்ணும் தெரிந்திருக்க வேண்டும்.

சேர்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாமல் நடந்து கொண்டு நோய் வந்தால், அதற்குப் ‘பொம்பளை நோவு' என்று சொல்லிவிடுகிறார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கு அது சம்பந்தமான நோய் வந்தாலும், பெண்கள் அதையும் ‘பொம்பளை வியாதி' என்றுதான் சொல்லுகிறார்கள். இது, பெண்கள் சமூகத்திற்கே இழிவான காரியமாகும்.

ஆண் - பெண் தன்மை, உடல்கூறு, சேர்க்கை விளக்கம், கர்ப்பம், பிள்ளைப்பேறு ஆகியவைகளைப் பற்றிச் சர்க்கார், அத்தருணம் நெருங்கிய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அல்லது மேல் வகுப்புக்குப் பாடமாகவாவது வைக்க வேண்டும். இவை நன்றாக மக்கள் அறிந்தால், இக்காரியங்களில் ஒழுக்கத் தவறுதல்கூட ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். சின்ன தவறுதல் கூட ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். இன்ன இன்ன பதார்த்தம் சாப்பிட்டால், உடலுக்கு ஒத்துக்கொள்ளாது, நோய்வரும் என்று கருதினால், எப்படிச் சாப்பிடாமல் விட்டுவிடுகிறானோ, அதுபோல் இன்ன மாதிரி நடந்தால் கேடுவரும் என்று தெரிந்தால், அதைச் செய்யாமல் தப்பித்துக் கொள்வான். அப்படிக்கில்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தெரியாமல், இஷ்டப்படி நடந்து கொண்டு வந்த வினையைக் கடவுள் செயல் என்று சொன்னால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம்?

(காஞ்சிபுரத்தில் 16.6.1940 அன்று நடைபெற்ற திருமண விழாவில் ஆற்றிய உரை)

 *Download As PDF*

Sunday, 2 August 2009

நான் யார்?

எனது குடும்பம் ஒரு வைதீகக் குடும்பமாகும். குடும்பத்தில் எவ்வளவோ கோயில் கட்டுதல், சத்திரம் கட்டுதல், அன்னதானம் செய்தல் முதலிய பல காரியங்கள் செய்திருப்பதோடு, இந்தத் தர்மங்களுக்குச் சொத்துக்களும் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றபோதிலும், அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த நான் இன்று பல மக்களால் ஒரு புரட்சிக்காரனென்றும், தீவிரக் கிளர்ச்சி செய்கிறவன் என்றும் சொல்லப்படுகிறேன்.

காரணம் என்னவென்றால், நம்முடைய கீழ்மை நிலைமைக்குக் காரணமாய் இருக்கும் அடிப்படையில் நான் கை வைப்பதால்தான். அது என்னவெனில், எவ்வளவு காலத்திற்கு நாம் இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், இந்து சாஸ்திரம், புராணம் வேதம், இதிகாசம் முதலியவகைளயும் நம்பிப் பின்பற்றிக் கொண்டு இருக்கிறோமோ, அதுவரையில் நாம் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டர்களாகவும், சம உரிமைக்கு அருகதை அற்றவர்களாகவும் இருப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவே முடியாது.

அம்மாதிரி, அவைகளில் இருந்து வெளியேறாமல், அவைகளை நம்பிப் பின்பற்றி நடந்து வந்தவர்களில் ஒருவராவது அவர்கள் வேறு வழிகளில் எவ்வளவு முயற்சித்தவர்களாய் இருந்தாலும், எவ்வளவு பெரியவர்களாகி இருந்தாலும் - அவர்களுக்கு ஏற்பட்ட இழிவிலிருந்து தப்பித்துக் கொண்டவர்கள் எவருமே இலர் என்பதை ஒவ்வொரு சீர்திருத்தவாதி என்பவனும் நன்றாக உணரவேண்டும் என்று சொல்லி வருகிறேன்.

( குடிஅரசு- 13.1.1945) *Download As PDF*

15. வைக்கம் வீரர்

ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் ஆகிய கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் எழுதிய ரகசியக் கடிதம் தான் ஈ.வெ.ராவின் கையில் கிடைத்தது. கேரள ராஜ்யத்தில் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது வைக்கம் என்ற ஊர். சிறு கிராமமாகவும் இல்லாமல் பெரு நகரமாகவும் இல்லாமல் மத்திய தரமான ஊர் வைக்கம். அங்கே இருந்த கோவிலைச் சுற்றி இருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என்ற தடையை நீண்ட நாட்களாக நம்பூதிரிகளால் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து போராட்டம் செய்தவர்களை பிடித்து உள்ளே போட்டது சமஸ்தானம். தெருவுக்குள் நுழையும் போராட்டத்தை கேரள காங்கிரஸ்காரர்கள் தொடர்ந்து நடத்தினார்கள். ஒவ்வொரு பிரிவாக தினம் போராட்டத்தில் ஈடுபடுவதும், கைது செய்யப்பட்டதும் உள்ளே போய் உட்கார்ந்து கொள்ளுவதுமாக காங்கிரஸ்காரர்களின் போராட்டம் பதினெட்டு நாட்கள் நடந்தது. பத்தொன்பதாம் நாள் போராட்டம் நடத்த ஆள் இல்லாமல் போய் விட்டது. அப்படி உள்ளே போனவர்களில் ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் முக்கியமானவர்கள். அவர் எழுதிய கடிதம் கண்டுதான் ஈ.வெ.ரா கிளம்பினார்.

திருவதாங்கூர் வந்து கிளர்ச்சியில் ஈ.வெ.ராமசாமி ஈடுபடப் போகிறார் என்ற செய்தி திருவிதாங்கூர் மன்னருக்கு எட்டியது. தமது உயரதிகாரிகளை அனுப்பி மன்னர் சில ஆணைகளை நிறைவேற்றச் சொன்னார். திருவிதாங்கூரிலிருந்து மன்னர் டில்லிக்குப் போகும் போதெல்லாம் தனது பரிவாரங்களுடன் ஈரோட்டில் இறங்குவார். அங்கிருக்கும் வெங்கட்ட நாயக்கரின் சத்திரத்தில் தங்கி இளைப்பாறி, அறுசுவை விருந்துகளையும் அன்பான உபசரிப்பையும் ஏற்றுக்கொண்டு பின் பயணத்தை தொடர்வார். இது அவரது வழக்கம். வெங்கட்டரின் மறைவுக்குப் பிறகும், ராமசாமி இந்த காரியங்களைத் தொடர்ந்து செய்து வந்ததால் அவருக்கு பதில் மரியாதையாக மிகப் பெரிய வரவேற்பு ஒன்றை கொடுக்கப் பிரியப் படுவதாகவும், போராட்டத்தில் ஏதும் கலந்து கொள்ளாமல் ராமசாமி திரும்பிச் செல்ல வேண்டுமென்றும் அதிகாரிகள் வைக்கம் வந்திருங்கிய ஈ.வெ.ராவிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால் முன் வைத்த காலை பின் வைத்து பழக்கப் பட்டிராத ராமசாமி மன்னரின் கோரிக்கைளை ஏற்க மறுத்து அதிகாரிகளை திருப்பி அனுப்பினார்.

ஈ.வெ.ராவின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு போராட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர். சில ஆயிரம் பேர் போராட்டத்தில் குதித்தனர். கோஷங்களும் பேரணிகளுமாய் வைக்கம் நகரமே குலுங்கியது. அரசின் தடையை மீறி தாழ்த்தப் பட்டவர்களுடன் அனுமதி மறுக்கப் பட்ட தெருவுக்குள் நுழைய முயன்ற ஈ.வெ.ராவை கைது செய்தது காவல் துறை. ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப் பட்டது. ஈ.வெ.ராவின் கைதை தொடர்ந்து கோவை அய்யாமுத்து, மயூரம் ராமநாதன் போன்றோரும் தனித்தனியாய் தலமையேற்று கைதானார்கள். நாகம்மையாரும் ஈ.வெ.ராவின் தங்கை கண்ணமாளும் தலைமையேற்று போராட்டத்தை தொடர்ந்தனர். பெண்களின் போராட்டம் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விருவரும் திருவிதாங்கூர் முழுவது சுற்றுப் பயணம் செய்து தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தைப் பற்றி விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சிறையில் அடைக்கப் பட்டிருந்த ஈ.வெ.ரா, அருவிக்குத்தி என்ற தீவிற்கு ஆறுமாத கடுங்காவல் விதிக்கப்பட்டு நாடு கடத்தப் பட்டார். அங்கு போகும் வழியில் புயலில் சிக்கி படகு வேறு பக்கம் ஒதுங்கியது. சட்டத்திற்கு கட்டுப் பட்ட ஈ.வெ.ரா தாமே முனைந்து படகில் வந்த காவலர்களுக்கும் பாதுகாப்பு தந்து படகை அருவிகுத்தி தீவுக்கு திருப்பி சிறைக்குள் அடைந்து கொண்டார்.

பெண்கள் தலைமையேற்ற தொடர் போராட்டத்தால் திருவிதாங்கூர் மகாராணி அனுமதி மறுக்கப்பட்ட தெருவுக்குள் தாழ்த்தப் பட்டவர்களை உள்ளே விட அனுமதி அளித்தார். இதனை காந்தியடிகளே நேரில் வந்து சிறைக்குள் இருந்த பெரியாரை சந்தித்து தெரிவித்தார். அவர் சொன்னால் மட்டுமே நாகம்மாளும், கண்ணம்மாளும் போராட்டத்தை கைவிடுவார்கள் என்பதால் அவ்வாறு வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

அதன் படி பெரியாரின் வேண்டுகோளை ஏற்று அவ்விருவரும் போராட்டத்தை முடிவுக் கொண்டு வந்தனர். அரசு பணிந்தது, தாழ்த்தப் பட்ட மக்கள் தெருவில் நடக்கும் உரிமையை பெற்றனர். ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப் பட்ட ஈ.வெ.ராவுக்கு நான்கு மாதத்திலேயே விடுதலை கிடைத்தது. திருவிதாங்கூர் மன்னரின் மறைவை ஒட்டி, அரசியல் கைதிகள் அத்தனை பேரும் விடுவிக்கப் பட்டனர். ஈ.வெ.ராவும் வெளியே வந்தார். நேரே ஈரோடு சென்று நோய்வாய்ப் பட்டிருந்த சின்னத்தாயம்மையாரை காண விழைந்தார். 1924, செப் 11ந்தேதி சென்னை மாகாண அரசால் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். எப்போதோ பேசிய அரசுக்கு எதிரான மேடைப் பேச்சின் காரணமாக கைது செய்யப்பட்டிருந்தார். போதிய ஆதாரமில்லையென நீதிமன்றம் கூறியது. அரசும் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டது.

1925, நவம்பர் 29ந்தேதி நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு போராட்ட வெற்றிவிழாக் கூட்டத்தில் ஈ.வெ.ராவும் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு வைக்கம் வீரர் என்று சிறப்பு பட்டம் சூடி மக்கள் மகிழ்ந்தனர். சாதாரண ஒரு வியாபாரியின் மகனான ஈ.வெ.ராமசாமி, கொண்ட கொள்கைப் பிடிப்பாலும் தமது உறுதியான முடிவினாலும் வைக்கம் வீரராக போற்றப்பட்டார்.

காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் நல்லவண்ணம் வெற்றி வாகை சூடியது. தென்னகத்தில் இத்திட்டம் பரவலாகவும், வெற்றியாகவும் அமைவதற்கு ஈ.வெ.ரா ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது. இந்த சூழ்நிலையில்தான் காங்கிரஸில் ஒரு கருத்து வேறுபாடு முளை விட்டது. சித்தரஞ்சன தாஸர் தலைமையில் சிலர் கூடி, இனி அரசுடன் ஒத்துழைத்து சட்ட மன்றங்களை கைப்பற்றி ஆட்சியமைக்க வேண்டுமென வாதிட்டனர். அதற்கென சுயராஜ்யக் கட்சி என்றொரு அரசியல் அமைப்பினையும் தொடங்கினர். இதன் கிளை தென்னகத்தில் தோற்றுவிக்கப் பட்டு அதனை பார்ப்பனர்களே முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டனர். அப்போதும் ராஜாஜியும், ஈ.வெ.ராவும் காந்தியடிகளின் பக்கமே நின்றனர்.

சுயராஜ்யக் கட்சியின் தோற்றத்தால் மிண்டோ-மார்லி சீர்திருத்தத்தின் விளைவால் இந்தியர்களையும் உயர் உத்தியோகங்களின் நியமிக்க வெள்ளை அரசு ஒத்துக் கொண்டது. அதன் படி அந்த உயர் பதவிகள் அத்தனையும் பார்ப்பனர்களே பெற்றுக் கொண்டனர். எடுத்துக் காட்டாக 1898 முதல் 1930 வரை நியமிக்கப் பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒன்பது பேர் இந்தியர். இதில் 8 பேர் பார்ப்பனர், ஒருவர் நாயர்.

இப்படியாக எல்லா உயர் பதவிகளும் அவர்கள் வசம் ஆட்சி அதிகாரத்தில் நுழைந்துகொள்ள பார்ப்பனர்கள் தீட்டிய இந்த சதித்திட்டத்தினால் வெகுண்டெழுந்த டாக்டர் டி.எம்.நாயர், சர்.பி. தியாகராயர் இருவரும் சென்னையில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிகட்சியைத் துவங்கினர். பனகல் அரசர் ராமராய நிங்கவார், டாக்டர் நடேசமுதலியார் ஆகியோர் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆனால்.. காங்கிரஸின் போலி மாயை மூடுபனி போல இருந்ததால் தமிழகத்தலைவர்கள் பலர் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தனர்.

பார்ப்பனர் அல்லாதோர் ஒன்றிணைந்து செயல்படுவதை பார்ப்பனர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் பார்ப்பனர் அல்லாதோரின் உழைப்புக்கு கிடைக்கும் பெயரையும் புகழையும் பார்ப்பனர்களால் மறைக்கப்பட்டது. வைக்கம் போராட்டமாகட்டும், ஈரோட்டு சாலை மறியலாகட்டும் எதையுமே அவர்கள் வெளியிட வில்லை. நீதிகட்சியினர் நடத்திய ’திராவிடன்’ தமிழ் ஏடும்,’ஜஸ்டீஸ்’(இதன் காரணமாக நீதிகட்சி என்ற பெயரை விட ஜஸ்டீஸ் கட்சி என்ற பெயரை பார்ப்பனர்கள் திட்டமிட்டு பரப்புரைத்து பொதுமக்கள் அண்டவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்) என்ற ஆங்கில பத்திரிக்கையும் இச்செய்திகளை பெரியதாக வெளியிட்டிருந்தாலும்.. இவைகளுக்கு போதிய செல்வாக்கில்லை. ஆகையால் தாமே ஒரு பத்திரிக்கையை தொடங்குவது என தீர்மானத்திற்கு வந்தார் ஈ.வெ.ராமசாமி.

-------
(தொடரும்) *Download As PDF*

Saturday, 1 August 2009

நான் எப்படி?


நான் ஒரு சுதந்திர மனிதன். எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம் உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்புக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளாலும் இதற்கு இடம் கொடுக்க வில்லையானால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.

(திருப்பூரில் சொற்பொழிவு, புரட்சி, 17.12.1933)

*Download As PDF*

14. ஈ.வெ.ராவுக்கு வந்த மர்மக்கடிதம்..

கள்ளுக்கடை மறியலுக்கு நாள் குறிக்கப்பட்டது. ஆங்கில அரசை எதிர்த்து நடக்கும் போராட்டம். அதுவும் விடுதலை வேண்டி அல்ல. அவர்களின் ஆட்சி முறையில் இருக்கும் கோளாறுகளை குறைசொல்லி நடக்கும் போராட்டம். காங்கிரஸ் ஆதரவு அளித்து விட்டாலும் முழுப் பொறுப்பு ஈ.வெ.ராவின் வசம் ஒப்படைக்கப்பட்டது. போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. வழக்கமாக நடைபெறும் சுதந்திரப்போராட்டம் என்றால் பிரிட்டிஷ் அரசு அனுமதி கொடுத்திருக்கும். இது கள்ளுக்கடை மறியல். அவர்களைப் பொருத்தமட்டில் புதுவடிவத்தில் சுதந்திரப் போராட்டத்தை நடத்தப் போகிறார்கள் என்பதாக கருதி இருக்கலாம். அதனாலேயே 144 தடை உத்தரவை போட்டு, போராட்டத்தை தடுத்து நிறுத்திட நினைத்தது ஆங்கில அரசு. ஆனால்.. எதற்கும் அஞ்சாத ஈ.வெ.ரா தொண்டர்களை அணி திரட்டி போராட்டத்தை நடத்தினார். தடையை மீறி மறியல் நடத்தியதற்காக ஈ.வெ.ரா உட்பட பல்லாயிரக்கணக்காணோரை ஆங்கில அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

ஊருக்கு மட்டும் உபதேசம் செய்து வாழ்ந்தவர் அல்ல ஈ.வெ.ரா. தம் கொண்ட கொள்கையின்பால் தமது வீட்டினரையும் தயார் செய்து வைத்திருந்தார். பெரியாரின் இல்வாழ்க்கைத்துணை நாகம்மையாரும், பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். நாடு முழுவதும் பெண்களை ஒன்று திரட்டினர்.

பெண்கள் செய்யும் போராட்டம் தானே.. பெரிதாக என்ன செய்து விடப்போகிறார்கள் என்று அலட்சியம் காட்டிய பிரிட்டிஷ் அரசுக்கு அப்போது தெரியாது. மகளிர்சக்தி என்ன என்பது. மறியல் போரில் கலந்து கொள்ளும் பெண்களை கைது செய்ய போலீசார் காத்திருந்தனர். தெரு வாசலில் காத்துக்கிடந்த போலீசாரின் கண்ணில் மண்னைத் தூவி விட்டு பெண்கள் அனைவரும் தனித்தனியாக திரண்டனர். ஊருக்கு வெளியே இருக்கும் கள்ளுக்கடை அருகில் போய் ஒன்று சேர்ந்துகொண்டு கள்ளுக்கடைக்கு எதிரான கோஷங்களை போட்டபடி ஊர்வலம் போகத்தொடங்கினர்.

போலீசாருக்கு செய்தி பறந்தது. அவர்கள் கிளம்பி வருமுன் கள்ளுக்கடையை அடைந்துவிட்ட பெண்கள் கூட்டம் அக்கடையை அழிக்கும் பணியில் ஈடு பட்டது. கள்ளுப் பானைகள் விழுந்து நொறுங்கின. பெயர் பலகையும் அடித்து உடைக்கப்பட்டது. குடிசை பிரித்து எறியப்பட்டது. விற்பனை செய்துகொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். சுனாமியாய் புறப்பட்ட பெண்கள் படைக்கு ஆவேசம் அடங்க வில்லை. அப்படியே அடுத்த கிராமங்களில் இருக்கும் கள்ளுக்கடையை நோக்கி நகர்ந்தனர். நாகம்மை, கண்ணம்மாள் உட்பட அத்தனை பெண்களிடத்தும் தனியாத கோபம் எரிந்துகொண்டிருந்தது. மேலும் சில கடைகளை அழித்த பிறகு, போலீசார் வந்து சேர்ந்தனர்.

நாகம்மையாரும், கண்ணம்மாளும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடம் ஆயிரக்கணக்கான பெண்களும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பத்திரிக்கை செய்தியாகியது. காங்கிரஸ் வரலாற்றில் முதலில் சமூகப் பிரச்சனைக்கான போராடி சிறை சென்றவர்கள் பெரியாரும், அவர்தம் குடும்பத்தினரும் தான் என்பதை வரலாறு பதிவு கொண்டது.

கள்ளுக்கடை மறியலால் பெண்களை பிரிட்டிஷ் அரசு கைது செய்துவிட்டது என்ற செய்தி காட்டுத்தீபோல வேகமாக பரவியது. நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்தன. ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக போராட்டங்களில் மூழ்கினர் மக்கள். ஆங்கில அரசு பயந்து போனது. ஈரோட்டில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவை நீக்கியது. மும்பையில்(பம்பாய்) ஒத்துழையாமை இயக்க செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளுமாறு காந்தியடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது அரசு.

அதன் முதல் கோரிக்கையே என்ன தெரியுமா? கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள் என்பதாகவே இருந்தது. இதற்கென பண்டித மாள்விய, சங்கரன் நாயர் போன்றவர்களின் முயற்சியால் ஒரு தனி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டில் காந்தியடிகளிடம் இந்த மறியல் போராட்டத்தை நீங்கள் நிறுத்தச்சொல்லுங்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்.. இது தான், “மறியலை நிறுத்துவது என்பது என்கையில் இல்லை. அது ஈரோட்டில் இருக்கும் இரு பெண்கள் கையில் இருக்கிறது. நாகம்மை, கண்ணம்மாள் என்கிற அப்பெண்களைக் கண்டு உங்கள் கோரிக்கைகளை வையுங்கள்”

காந்தியடிகளின் இவ்வார்த்தை இந்திய நாடெங்கும் பரவியது. காந்தியடிகளே கைவிரித்து விட்ட காரியம், யாரோ இரு தமிழ்நாட்டுப்பெண்கள் கையில் தான் இருக்கிறதாம். அவர்களை நேரில் சந்திக்க தலைவர்கள் போகிறார்கள் என்ற செய்தி வேகமாக பரவியது. சில தலைவர்கள் ஈரோட்டுக்கு வந்து இறங்கினர். இவர்கள் வருவதற்கு முன்னமே சிறையில் இருந்த ஈ.வெ.ரா போன்றவர்கள் வெளியே விட்டு விட்டது அரசு. காங்கிரஸின் தலைவர்கள் நேரில் வந்து கேட்டதினால் போராட்டத்தை கைவிடுவதாக ஒப்புக்கொண்டார்கள்.. மகளிர்சக்தி கண்டு பித்துபிடித்து போய் இருந்தது ஆங்கிலேயே அரசு.

1922ம் வருடம் ஈரோட்டில் வந்த பண்டித மோதிலால் நேரு, வித்தல்பாய் படேல், டாக்டர் அன்சாரி போன்ற பெருந்தலைவர்கள் ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் தம் இல்லத்தில் தங்கியதின் நினைவாக அவ்வில்லத்தை இந்தி கற்பிக்கும் பாடசாலை ஒன்றை திறந்தார் ஈ.வெ.ரா. முப்பது மாணவர்கள் படிக்கும் வசதி கொண்ட அப்பள்ளியில் பதினைந்து மாணவர்களுக்கான தங்கும், செலவு, உணவு, உடை மற்றும் கல்வி ஆகிய எல்லா செலவுகளையும் தாமே ஏற்றுக்கொண்டார். ஏனோ அப்பள்ளி இரண்டு ஆண்டுகள் மட்டுமே நடந்தது.

நாட்டில் நிலவும் தீண்டாமையை ஒழிப்பு பிரச்சாரத்திலும் போராட்டத்திலும் காங்கிரசாரை இறங்கச்சொன்னார் காந்தியடிகள். காந்தியடிகளின் உத்தரவை ஏற்று முழுமூச்சாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ராமசாமி. போராட்டத்தில் ஒரு கட்டமாக தாழ்த்தப்பட்டோர் என்று ஒதுக்கப்பட்ட மக்களுடன் கோவிலுகுள் நுழையும் ஆலயப்பிரவேசம் என்ற போராட்டம் அது. இந்த ஆலயப்பிரவேசம் என்ற போராட்டத்திலும் முதல் வெற்றியை பெற்றவர் ஈ.வெ.ரா தான்.

குளித்தலையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு, அங்கிருந்தவாரே மதுரை மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் தீட்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் ராமசாமி. அந்த பயணம் அதிக நாள் நீடிக்க வில்லை. தீராத வயிற்று நோய் (அல்சர்) அவரை பாடாகப் படுத்தியது. சுற்றுப்பயணத்தை பாதியிலேயே விட்டு விட்டு, எங்கெல்லாம் போய் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற விபரங்களை மற்றவர்களிடம் சொல்லி பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஈரோட்டுக்கு திரும்பினார்.

சாப்பாடு நேரம் தவறி சாபிடுவதும், அதிக காரமான உணவும் தான் இப்படியான நோய்கள் வரக்காரணம் என்று சொல்லப்பட்டதால் கண்டிப்புடன் ராமசாமியை கட்டாய ஓய்வில் இருக்கச்சொல்லி விட்டார்கள். படுக்கையிலேயே நாட்கள் கழிந்தன.. அப்போது வீட்டில் யாரும் தெரியாமல் ஒரு ரகசியக் கடிதம் ஈ.வெ.ராவின் கைகளின் கிடைக்கும் வண்ணம் அனுப்பப்பட்டு வந்து சேர்ந்தது.

அந்த கடிதத்தை படித்த ராமசாமி தமக்கு குணமாகி விட்டதாகவும், தாம் ஒரு வேலையாக வெளியூர் செல்லவேண்டும் என்றும் பொய் சொல்லி, பெட்டியில் துணிமணிகளை அடுக்கி வைத்துக்கொண்டு, வயிற்று நோயுடனே கிளம்பிப் போனார். கணவர் செல்வதை வாசலில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் நாகம்மை.

அந்த மர்மக்கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது? அதைப் படித்ததும் அவசரம் அவசரமாக எங்கே கிளம்பிப் போகிறார்.. ஈ.வெ.ராமசாமி....?

(தொடரும்) *Download As PDF*