Friday, 31 July 2009

13. கதர் ஆடை இயக்கம்

பார்த்துக்கொண்டிருக்கும் வேலை அல்லது செய்து கொண்டிருக்கும் தொழில் அல்லது வகித்துக்கொண்டிருக்கும் பதவி இவற்றை நாட்டின் நலனுக்காக விட்டுக்கொடுக்க நம்மில் எத்தனை பேருக்கு மனம் இருக்கும். ஈ.வெ.ராமசாமிக்கு அந்த மனம் இருந்தது. நாட்டின் விடுதலைக்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது தாம் வகித்த இருபத்தியென்பது பதவிகளையும் தூக்கி எறிந்தார் அவர். கதர் ஆடை அணிதல், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகிய மூன்றும் காந்தியடிகளின் பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகித்தது. அதனை அப்படியே உள் வாங்கிக்கொண்ட ஈ.வெ.ரா அதன் வழியில் மாறினார்.

தீண்டாமை கூடாது என்று பேசியும், கடைபிடித்தும் வந்தவர் தான் ஈ.வெ.ராமசாமி. அதனோடு இப்போது கதராடையும், மதுவிலக்கு பிரச்சாரங்களும் சேர்ந்துகொண்டன. சாரட் வண்டி, பட்டு, பாலீஸ்டர் ஆடைகள், செல்வந்தருக்கான அலங்காரங்கள் எல்லாவற்றையும் துறந்தார். கஞ்சி போட்ட கதர் ஆடைக்கு மாறினார். மாற்றத்தை தன் குடும்பத்தில் இருந்தே தொடங்கினார். ராசமாமியின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணமாவும் கதராடைகளுக்கு மாறினார்கள். என்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த தாயார் சின்னத்தாயம்மையாரையும் கதராடை பக்கம் இழுந்துவந்தார் ராமசாமி. பின்னர் உறவினர்கள், நண்பர்கள் என தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் கதராடைக்கு மாற்றினார். அதன் பின் கதராடை தயாரிப்புக்கான நூற்புராட்டினம் தக்ளியும் அறிமுகம் செய்து வைத்து நூல் நூற்கத்தொடங்கினார்.

தொடர்ந்து பொதுப்பணிகளில் ஈடுபட்டதால்.. மண்டிக்கு செல்ல முடியவில்லை. அதனால் மண்டியை மூடினார். வெளியில் இருந்து வரவேண்டிய லட்சக்கணக்கான பணம் வராமல் போனது. இவ்வளவு பெருந்தொகையை இழக்க நேர்ந்த போதும் ஈ.வெ.ரா கலங்கவில்லை. சேலத்தில் பிரபலமாக இருந்த வழக்கறிஞர் விஜயராகவாச்சாரியார் என்ற காங்கிரஸ்காரர் கடன் பத்திரங்களைக் கொடுங்கள்.. கோர்ட் மூலம் வசூலித்து விடலாம் என்று சொன்னார். தமது கொள்கைக்கு முரணாக விசயம் நஷ்டம் ஏற்பட்டாலும் கொள்கைக்கு முரணாக போகமாட்டேன் என்று பிடிவாதமாக அந்த இழப்புக்களை தாங்கிக்கொண்டார் ராமசாமி. இப்படியும் ஒரு மனிதரா என்று வியந்த விஜயராகவாச்சாரி பல சந்தர்ப்பங்களில் இந்த சம்பவம் குறித்தும் பலரிடம் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

அரண்மனை போன்ற விட்டை விட்டு வெளியேறி கதராடை பிரச்சாரத்திற்கு நண்பர்கள் சகிதம் செல்லத்தொடங்கினார். முதலில் ஈரோட்டிலும், பின்ன்னர் அதனி சுற்றிய கிராமப்பகுதிகளுக்கும் செல்லத்தொடங்கினார். கொடை வள்ளல் வெங்கட்டரின் மகன், பிரபலமான வியாபாரி.. எல்லாவற்ரையும் துறந்து இவ்வளவு எளிமையாக கதராடை பிரச்சாரத்தில் ஈடு படுகின்றாரே.. நம்மிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது.. என்று யோசித்த ஏழை, எளிய மக்களும், மற்ற செல்வந்தர்களும் கதராடைக்கு மாறத்தொடங்கினார்கள். ஆடை மாற்றம் மட்டும் போதும் என்று நினைக்கக்கூடியவரல்ல ராமசாமி. அதனால்.. அப்படி மாறியவர்களையும் பிரச்சாரம் செய்யும் படி கேட்டுக்கொண்டார்.

பிரச்சாரம் எளிமையாகப் பரவத்தொடங்கியது. தமிழகம் முழுக்க கிராமம் கிராமமாக தோளில் தூக்கியபடி கதராடைகளை விற்கப்போனார். அன்னிய ஆடைகளை கொழுத்திப் போட தயாராக இருக்கும் எளிய மக்களுக்கு தம் செலவிலேயே கதராடைகளை வழங்கவும் செய்தார். அனேகமாக தமிழகத்த்தில் ஈ.வெ.ராமசாமியின் கால் படாத பகுதியே இருக்க முடியாது என்ற அளவில் கதராடை பிரச்சாரத்தை நடத்தினார். மாநிலம் முழுவதும் கதராடை பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

தமிழகத்தில் கதர்த்துணி அங்காடிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் எண்ணி அதை செயல் வடிவமும் கொடுத்தார் ராமசாமி. பல பகுதிகளில் அங்காடிகள் திறக்கப்பட்டன. பின்னாலில் பிரபல எழுத்தாளராகவும், பத்திரிக்கை ஆடிரியராகவும் வளர்ந்த கல்கி-ரா.கிருஷ்ணமூர்த்தி திருச்செங்கோடு கதர் அங்காடியில் முதலில் பெரியாரால் பணிக்கு அமர்த்தப்பட்டார். காங்கிரஸ்காரர்கள் முதலில் கதராடைக்கு அவர் தம் குழும்பத்தினருடன் மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார் ராமசாமி. காங்கிரஸ் அதனை ஏற்றது. எல்லோரும் கதர் ஆடைக்கு மாறினார்கள். காங்கிரஸ் கட்சியில் இல்லாதவர்கள் கூட கதராடைக்கு மாறினார்கள். தமிழகத்தில் கதராடை புரட்சி நடந்தது என்று கூட சொல்லலாம். மற்ற பகுதிகளை விட தமிழகத்தில் இது வேகமாக பரவ முக்கிய காரணமாக இருந்தது ஈ.வெ.ராமசாமியின் உழைப்பும், பேச்சும் என்றால் அது மறுக்க முடியாது.

இங்கே இரு செய்தியை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மதுஒழிப்பு பிரச்சாரத்தில் கள் உண்ணாமையும் ஒரு அங்கமாக இருந்தது. காந்தியடிகள் அப்படி சொன்னதும்... தன் தோட்டத்தில் இருந்த அய்நூறுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை ஒரே நாளில் வெட்டிச் சாய்த்தார் ஈ.வெ.ராமசாமி. அந்த காலகட்டத்தில் தென்னை மரத்திலிருந்தும் கள் இறக்குமதி வெகு விமர்சையாக நடந்து வந்தது. அதனால்.. நிறைய பலனை எதும் செய்யாமல் தந்துகொண்டிருக்கின்ற தென்னை மரங்களை பலரின் எதிர்ப்புக்களையும் மீறி வெட்டிச் சாய்த்தார்.

மது ஒழிப்பு திட்டத்தை அமல் படுத்த வலியுறுத்தும் போராட்டத்தில் ஒரு பகுதியாக கள் உண்ணாமை போராட்டத்தை அறிவித்தார் காந்தியடிகள். இதனை எவ்வாறு நடத்துவது என்று திட்டமிட காந்தி தேர்வு செய்த ஊர் ஈரோட்டு. காந்தியின் அறிவிப்பைத் தொடர்ந்து ஈரோட்டுக்கு வந்திறங்கிய காங்கிரஸ் தலைவர்களுடன் ஈ.வெ.ராமசாமியும் கலந்து பேசி கள்ளுக்கடைக்கு முன் மறியல் நடத்துவது என்று முடிவு செய்கிறார்கள்.

ஈ.வெ.ராமசாமி மதுகொள்கையில் காட்டி வந்த ஆதரவு தான் காந்தியையும் மற்ற காங்கிரஸ் தலைவர்களையும் ஈரோட்டுப் பக்கம் வந்து போராட்டத்திற்கு நாள் குறிக்க காரணமாக இருந்தது. மேலும் ஆங்கில அரசுக்கு அடிபணிந்து போய்க்கொண்டிருந்த நீதிக்கட்சியின் வளர்ச்சியை முடியடிக்க, காங்கிரஸ்காரர்களின் மறைமுக தூண்டுதலால் திவான் பகதூர் கேசவப்பிள்ளை போன்றவர்களினால துவங்கப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்தின் மாநாட்டை ஈரோட்டில் வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் ஈ.வெ.ராமசாமி. ராமசாமி ஒரு காரியத்தை தொட்டு விட்டால் வெற்றியைப் பார்க்காமல் ஓயமாட்டார் என்பதை அறிந்திருந்ததால்.. கள்ளுக்கடை முன் மறியல் போராட்டத்தை ஈரோட்டிலேயே துவங்க வேண்டும் என்றும் காங்கிஸ்காரர்கள் ஆசைப் பட்டார்கள்.

---------------------
(தொடரும்) *Download As PDF*

Thursday, 30 July 2009

12. பதவிகளை தூக்கி எரிந்த ஈ.வெ.ரா

வெங்கட்டர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப் பட்டிருக்கும் போது அவர் பெயரில் தர்மங்கள் செய்வதற்கு ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈ.வெ.ரா ஈடுபட்டார். ஆனால் இதற்கு ஈ.வெ.ராவின் அண்ணன் கிருஷ்ணசாமி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தான் நினைத்ததைச் செய்து முடித்தார் ராமசாமி. ஆண்டொன்றுக்கு குடும்ப சொத்திலிருந்து ரூபாய் இருபதாயிரம் வரை வருமானம் வரும். அதில் இரண்டு மகன்களின் குடும்பச் செலவுக்கும் பணம் ஒதுக்கி மீதி வருமானம் தர்மத்திற்கு செலவிடப் படவேண்டுமென அறக்கட்டளை உருவாக்கி விட்டார்.

வெங்கட்ட நாயக்கர், 1911-ஆம் ஆண்டு காலமானார். வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவரது உடல் எரியூட்டப் பட்டிருக்க வேண்டும். ஆனால் ராமசாமி அவ்வாறு செய்யவில்லை. ஈரோடு புகைவண்டி நிலையம் அருகில், அந்தக் குடும்பத்திற்கு சொந்தமான இடம் இருந்தது. ரயில்வே நிர்வாகம் அந்த இடத்தை கையகப் படுத்தும் முயற்சியில் தீவிரமாக இருந்தது. எனவே அதைத் தடுப்பதற்காக ஒரு திட்டம் போட்டார். மரணப் படுக்கையில் இருந்த வெங்கட்டரை சந்நியாசம் வாங்கச் செய்தார். சந்நியாசிகளை எரியூட்டக் கூடாது என்ற மரபு இருப்பதால் தன் சொந்த நிலத்திலேயே மரணத்திற்குப் பின் வெங்கட்டரை புதைத்தார். மனிதர் புதைக்கப் பட்ட இடத்தை ரயில்வே நிர்வாகம் கையகப் படுத்த முடியாது என்பதால் இவ்வாறு செய்தார்.

ஈ.வெ.ரா வகித்து வந்த இருபத்தொன்பது பதவிகளில் முக்கியமானது ஈரோடு நகர்மன்றத் தலைவர் பதவி. அந்த சமயத்தில்தான் காவேரி ஆற்றிலிருந்து ஈரோட்டு நகருக்கு குடிநீர் கிடைக்க குழாய்களை அமைத்தார். காவிரியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் வடிகட்டி, பாதுகாக்கப்பட்ட தண்ணீராக விநியோகிக்க ஏற்பாடு செய்திருந்தார். அநேகமாக இது தென்னிந்தியாவின் முதல் முயற்சி எனலாம். அதற்கும் கூட எதிர்ப்பு பலமாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியின் வழியாக வரும் குடி நீர் குழாய் சேரிகளுக்கு முதலிலும், பின்னர் ஊருக்குள்ளும் தண்ணீர் வரும் படி ஏற்பாடு செய்யப்பட்டதே எதிர்ப்புக்கு காரணம்.

குழாய் வழியாக தீட்டு வந்துவிடும் என்று யாரோ கட்டிவிட்ட பொய்யை நம்பிய மக்கள் இதனை எதிர்த்தார்கள். ஈ.வெ.ரா-வின் தாயார் சின்னத்தாயம்மையார் கூட இதற்கு எதிர்ப்பு காட்டினார். எல்லோரின் எதிர்ப்பையும் புறங்கையால் தள்ளி விட்டு தம் திட்டத்தை நிறைவேற்றினார் ஈ.வெ.ரா. எல்லாவற்றிற்கும் பரிகாரம் சொல்லும் நம்மவர்கள் இதற்கும் ஒரு பரிகாரத்தை கண்டுபிடித்தார்கள். முதலில் ஒரு பிராமனர் வந்து பூஜை செய்து, குழாயில் கோமியம்(மாட்டின் சிறுநீர்) தெளித்து புனித்தப்படுத்துவார். பின்னர் கொஞ்சம் புளியை கொண்டு குழாயின் தலை சுத்தம் செய்வார். அதன் பின்னார் அவர் தண்ணீர் பிடித்துக்கொண்டு போன பின்பு யாரும் தண்ணீர் பிடிக்கலாம். ஒவ்வொரு பிரமணரும் இவ்வாறு செய்ய, பிராமணரல்லாதோரும் இதையே செய்யத்தொடங்கினார்கள்.

ஒரு நாள் ஒரு இஸ்லாமியப் பெண் இது போல செய்வதைகண்ட பெரியார் அவரிடம், ‘உங்கள் மதத்தில் இது போன்ற மூட பழக்கங்கள் கிடையாதே நீங்களுமா நம்புகிறீர்கள் தீட்டு சமாச்சாரத்தை’ என்று மற்றவர்கள் செய்வதற்காக காரணத்தை சொல்லிக் கேட்டார். அப்பெண்மணியோ, ’எங்களுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. புளி போட்டு குழாய்யை தேய்த்தால் தான் தண்ணீர் வரும் என்று எங்களிடம் சொன்னார்கள் அதனால் செய்தோம்’ என்று அப்பவியாக சொன்னார்.

ஒரு சாரார். இதன் காரணமாக ஈரோட்டு நகர்மன்ற தலைவர் பதவியில் இருந்து ராமசாமியை நீக்குமாறு கடிதங்கள் எழுதினார்கள். கடிதத்திற்கு மதிப்பளித்து, உண்மையை அறிய வந்த குழு, பெரியார் ஏற்கனவே பல பதவிகளில் பொறுப்பு வகிப்பதையும், மக்களால் அதிகம் நேசிக்கப்படுவதையும் கண்டனர். இவரை விட்டால் வேறு சரியான நபர் இல்லை என்று சொல்லி திரும்பிச் சென்று விட்டனர். இது கடிதம் எழுதியவர்களில்
முகத்தில் கரியைப் பூசியது.

அதே போல ஈரோட்டு கடைவீதியை அகலப் படுத்தவும் செய்தார். அதற்கு முன்பு வரை கடைவீதியின் இருபுறமும் தாராளமாய் ஆக்ரமிப்புச் செய்து வைத்திருந்தார்கள் வணிகப் பெருமக்கள். இதனால் அந்தச் சாலையில் நடந்து போவது என்பது கூட சிரமமாக இருந்தது. பல பெரும் வணிகர்களின் எதிர்ப்புக்களையும் மீறி ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை ஒழுங்கு படுத்தினார். அந்தப் பெரும் வணிகர்களில் பலர் ஈ.வெ.ராவின் நண்பர்களாகவும் இருந்தார்கள். செல்வச் செழிப்பில் அவருக்கு நிகராகவும் இருந்தார்கள். இவை எதுவுமே ராமசாமியை தயங்க வைக்கவில்லை. இவரின் இந்த தைரியமான முடிவு ஈரோட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

வர்த்தகத்திலும் பொதுத் தொண்டிலும் ஈ.வெ.ரா முழுகவனம் செலுத்திய காலத்தில் நாட்டு நடப்பு குறித்தான செய்திகளையும் ஆழ்ந்து படித்தார். நாட்டு விடுதலைக்காக போராடி வந்த காங்கிரஸ் இயக்கம் குறித்து அவருக்கு அக்கறை இருந்தது. அவர்கள் அகிம்சை முறையில் படும் அல்லல்கள் குறித்தான அனுதாபம் இருந்தது. போக்குவரத்து மையப் பகுதியாக இருந்ததால் ஈரோடு வழியாகச் செல்லும் காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் பலர் ஈரோட்டில் இறங்கி நாயக்கர் வீட்டில் தங்கி உணவருந்திவிட்டு பயணத்தைத் தொடர்வது வழக்கம். அந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களான சேலம் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு, சி. ராஜகோபாலாச்சாரியர் என்ற ராஜாஜி ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்.
ராஜாஜி அப்போது சேலம் நகர்மன்ற தலைவராக இருந்தார்.

டாக்டர் வரதராஜுலு நாயுடு காங்கிரஸின் மிகப்பெரிய பேச்சாளர். மக்களுக்குச் சுலபமாக புரியும் விதத்தில் எளிமையாக அரசியல் நிலைமைகளை விளக்கிப்பேசுகிறவர். மாலை ஆறுமணிக்கு மேடையில் பேச ஆரம்பித்தால் இரவு ஒன்பது மணிக்கு தன் பேச்சை முடிப்பார். தொடர்ந்து நீண்ட நேரம் பேசக்கூடியவர் என்றாலும் கூட்டம் ஒரு போதும் கலையாது. இவர் எங்காவது பேசுகிறார் என்ற செய்தி அறிந்தால் மக்கள் கிராமங்களில் இருந்து எல்லாம் வண்டி கட்டிக்கொண்டு பொதுக்கூட்ட மேடைக்கு வந்து சேர்வார்கள். டாக்டர் வரதராஜுலு ‘தமிழ்நாடு’ என்ற பெயரில் ஒரு பத்திரிக்கையும் நடத்தி வந்தார். அக்காலகட்டத்தில் காங்கிரசாரின் முக்கியமான பிரச்சார கருவியாகவும் இப்பத்திரிக்கை பயன்பட்டது.

ஈ.வெ.ரா-வின் திறமையான நிர்வாகத்தால் ஈர்க்கட்டப்பட வரதராஜுலுவும், ராஜாஜியும் காங்கிரஸில் ராமசாமி இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதினார்கள். தமது இயக்கத்தினை பரவலாக எல்லா தரப்பு மக்களிடமும் கொண்டு போய் சேர்க்க உகந்தவர்களை பிடித்துக்கொண்டிருந்தது காங்கிரஸ்.

அப்போது தான் வி.கல்யாணசுந்தரம், வ.உ.சிதம்பரம் போன்றவர்களையும் தம்முள் இணைத்திருந்தது காங்கிரஸ். ஈ.வெ.ராவையும் இணைத்துக்கொண்டால் இன்னும் பலம் சேரும் என்று நினைத்தனர். இவ்விருவரின் தொடர் வற்புறுத்தலால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஈ.வெ.ராமசாமி.

கொஞ்ச நாட்களில் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் அறிவித்து, எல்லோரையும் அதில் ஈடுபடும் படி வேண்டுகோள் வைத்திருந்தார். அதில் ஈடுபட்டு முழுமூச்சாக செயலாற்றுவதற்கு தான் வகித்து வரும் பதவிகள் இடையூராக இருக்கும் என்று கருதிய ஈ.வெ.ராமசாமி, இருபத்தியென்பது பதவிகளையும் துறந்தார்.

(தொடரும்)

*Download As PDF*

Wednesday, 29 July 2009

நான் ஒரு தொண்டன்

நான் ஒரு பிறவித் தொண்டன்; தொண்டிலேயே தான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பது, எனக்கு இஷ்டமில்லாததும் எனக்குத் தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டுகோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனேயொழிய, இதில் எனக்கு மனச் சாந்தியோ, உற்சாகமோ இல்லை. இருந்தாலும் என் இயற்கைக்கும், சக்திக்கும் தக்கபடி நான் நடந்து வருகிறேன் என்றாலும் அதன் மூலம் எல்லோரையும் திருப்தி செய்ய முடியவில்லை.

(சென்னை கன்னிமரா ஓட்டலில், 6.10.1940இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.10.1940)


*Download As PDF*

11. ஈ.வெ.ராமசாமி நிர்வகித்த கோவில் பணிகள்

வெங்கட்டரின் வரத்து குறைந்தது ஒரு வகையில் ஈ.வெ.ராவுக்கு நிம்மதியாக இருந்தது. சாதி, மத வேறுபாடுகளை கண்டுகொள்ளாமல் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள் என எல்லாப் பிரிவினருடனும் கலந்து பழகுவதற்கு ஏதுவாக இருந்தது. எப்பொழுதும் கடையில் பத்துக்கும் குறையாத நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அவர்களின் புகை, மது போன்ற மேலாதிக்க பழக்கங்களுக்கு ஈ.வெ.ராவே புரவலராக விளங்கி வந்தார்.

ஈரோட்டில் எவ்வகுப்பினர் வீட்டிலும் நன்மை தீமை நடைபெற்றாலும் முதலில் இவரை அங்கு காணலாம். எல்லோரும் இவருக்கு தகவல் தந்து விடுவார்கள். சில இடங்களில் அழைப்பு இல்லாமலேயே நண்பர்களுடன் அந்த மாதிரி இடங்களுக்குப் போவதும் உண்டு. இவரின் தாராள உதவும் குணம் ஊர் முழுக்க இவரது புகழைப் பரப்பியது. குடும்ப விவகாரங்கள், வியாபார தகராறுகள், சண்டை சச்சரவுகள் எல்லாவற்றையும் தீர்க்கும் பொறுப்பும் இவரிடம் வந்து சேர்ந்தது. சில சமயங்களில் கோர்ட் விவகாரங்களும் இவரது தீர்ப்புக்கு வருவதுண்டு. கௌவரவ நீதிபதியாக பன்னிரெண்டு ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் பிளேக் நோய் பரவி பெரும் பீதியேற்பட்டிருந்த நேரம். மக்கள் நகரங்களை காலி செய்து தங்களின் வசதிக்கேற்ப வேறு இடம் மாறிக் கொண்டிருந்தார்கள். ஏழை மக்கள் போக வழியின்றி உள்ளூருக்குள்ளேயே பயத்துடன் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். பிளேக் நோயினால் இறந்தவர் வீட்டில் எல்லோரும் சடலம் உட்பட மற்ற எதையும் தொடாமல் வீட்டையே கொளுத்தி தெருவில் நின்று கொண்டிருந்த அவலமும் நிகழ்ந்தது. இந்த சமயத்தில் தான் துளியும் அஞ்சாமல் இறந்தவரின் சடலத்தை தோளில் தூக்கி சுடுகாட்டிற்கு கொண்டு போய் எரியூட்டி, ஈமச்சடங்குகளை இவரே முன்னின்று செய்தார்.

இப்படி பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட பலருக்கு இவர் செய்த உதவிகளினால் ஈ.வெ.ராவின் புகழ் மேலும் பரவியது. வாரம், பத்து நாட்களுக்கு மேலாக பிளேக் நோய் பாதிக்கப்பட்டவர்களோடு ஈ.வெ.ரா நேரம் செலவழிப்பதை கண்டு அஞ்சிய தேவையற்ற நண்பர்கள் எல்லோரும் விலகி ஓடினார்கள்.

ஈ.வெ.ராமசாமி, எத்தனையோ சமூகம் மறுத்த, தீய பழக்கமுடைய நண்பர்களோடு நெருக்கமாகத் தொடர்பிலிருந்த போதும், மது அருந்துதல் என்ற பழக்கத்திற்கு மட்டும் அடிமையாகவே இல்லை. எப்போதாவது வெற்றிலை பாக்கு போடுவதுண்டு. புகைபிடிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது. இவற்றையும் கூட தனது நாற்பதாவது வயதில், அறவே நிறுத்தினார். நல்ல பண்பாளர்கள் அறிவாளிகளின் உறவுகள் வந்து சேரத் தொடங்கியது இச்சமயத்தில்தான். பா.வே.மாணிக்கனார், கரூர் பெரும்புலவர் மருதையா, கைவல்ய சாமியார் ஆகியோரின் நட்புகள் வளரத் தொடங்கியது.

புலவர் மருதையா புராண புரட்டுக்களை பிரித்து மேய்வதில் வல்லவர். எதிர்காலத்தில் ஈ.வெ.ராவின் திடமான கொள்கைக்கு அடித்தளமாக அமைந்தது இவரது நட்பு. கைவல்யம் என்னும் வேதாந்த நூலை நன்கு கற்றுத் தேறியவர் என்பதால் கைவல்ய சாமியார் என்று பெயர் பெற்றவர், பார்ப்பனீயத்துக்கு பரம விரோதியாய் இருந்தார். ஈ.வெ.ரா காங்கிரஸ்காரராய் இருந்த போது அவரை கடுமையாகக் கண்டித்தவர்களில், இவரும் முக்கியமானவர். பார்ப்பனர் அல்லாதவர்களை ஒன்று திரட்ட வேண்டும் என்ற கைவல்ய சாமியாரின் எண்ணமும் பெரியாருக்கு பிற்காலத்தில் உறுதுணையாக இருந்தது.

தேடிச் சென்று காவாலித்தனம் செய்து கொண்டிருந்த ஈ.வெ.ரா தன் அரிசி மண்டியை விட்டு அதிகம் வெளியே போவதை குறைத்துக் கொண்டார். அப்படியே எங்காவது போவதாக இருந்தாலும் கடை அடைத்தபின் போய்விட்டு, காலையில் கடை திறக்க வந்துவிடுவார். பொது காரியங்களில் இவரின் ஈடுபாடு, தொழிலில் இவரது பக்தியை ஆகியவற்றைக் கண்டு மெய்சிலிர்த்துப் போயிருந்த வெங்கட்டர் ஊர்ப் பொதுக் கோவில்கள், சர்க்கார் தேவஸ்தான தொடர்பான காரியங்கள், உற்சவங்கள் முதலிவற்றில் தாம் விலகிக் கொண்டு இவரை முன்னிறுத்தினார். ஊர் பெருமை சேர்க்கும் விஷயங்களான இவற்றில் பெரும் புகழ் பெற்ற வெங்கட்டர்

தாமிருக்கும் போதே ஈ.வெ.ராவை முன்னிறுத்தியதால் இவரின் பெயரும் கோவில் காரியங்களிலும் வல்லவர் என்று பரவத் தொடங்கியது. தமக்கு கொடுக்கப்பட்ட பதவிகளை பொறுப்புக்களாய் உணர்ந்து சரிவர கடமையாற்றினார். அநேகக் காரியங்களில் இவரின் ஈடுபாடு இப்படியே இருந்தது. அதனாலேயே நம்பிக்கையில்லா காரியங்களில் கூட அதிக கவனமாகவும், நாணயமாகவும் நடந்து கொண்டார்.

ஈரோடு மாவட்ட தேவஸ்தான கமிட்டியின் தலைவராகவும் பொறுப்பேற்றார் ஈ.வெ.ரா. உருவ வழிபாட்டு எதிர்ப்பாளர், கோவில்களில் நம்பிக்கையில்லாதவர், திருவிழாக்கள் வீண் செலவு என்பவர், இவை எல்லாம் மக்களிடையே மூடநம்பிக்கையை வளர்க்கவே செய்கின்றன என்பதை உறுதியுடன் நம்பியவர் – தேவஸ்தான கமிட்டியின் தலைவரானதும், தமது பொறுப்புணர்ந்து கமிட்டிக்குட்பட்ட பல கோவில்களை புணரமைத்தார். மகனின் செயல்பாடுகளினால் உள்ளம் குளிந்தார் வெங்கட்டர். காலியாகிவிடுவானோ என்று பயந்த மகன் இவ்வளைவு பொறுப்பானவனாக மாறியதைப் பார்த்தால் எந்த தந்தைக்குத்தான் மகிழ்ச்சி ஏற்படாது.

கோவில் செல்வங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்கப் பட்டன. கோவில் நிலங்களின் குத்தகைத் தொகையை ஏற்றினார். கோவிலுக்குப் பழுது வராமல் புதுப்பித்தல், கும்பாபிஷேகம் செய்வது போன்ற திருப்பணிகளை தொய்வின்றி செய்து வந்தார். இவர் பொறுப்பேற்கும் போது கடனிலிருந்த கமிட்டியை தலை நிமிரச் செய்தார். பல ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டு அப்பதவிகளில் இருந்து நீங்கும் போது சுமார் நாற்பத்தியையாயிரம் ரூபாய் தேவஸ்தான கமிட்டிக்கு என சேர்த்து வைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் நாற்பத்தியையாரம் ரூபாயெனில் இன்றைய மதிப்புக்கு கற்பனை செய்து கொள்ளவும்.

இந்த சமயத்தில்தான் ஈரோடு நகர பாதுகாப்புக் கழகத் தலைவராகவும் ஆனார். 1919ல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கும் வரையிலும் சேர்மன் பதவியில் இருந்தார். அதற்கு முன் கௌரவ நீதிபதி, தாலுக்கா போர்டு உபதலைவர், வியாபாரிகள் சங்கத் தலைவர், ஜில்லா போர்டு மெம்பர் என பல பதவிகளை வகித்தாலும் ஈ.வெ.ரா ஈரோடு நகராட்சித்தலைவராக இருந்து ஆற்றியுள்ள சேவையே நேரடி அரசியலில் இறங்குவதற்கு முன்பான அவரது வாழ்வில் அதிகபட்ச புகழை பெற்றுத்தந்தது.

(தொடரும்)

*Download As PDF*

Monday, 27 July 2009

10. ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்

ஒரு வழியாக முகவரியைக்கொண்டு சுப்பிரமணிய பிள்ளையின் வீட்டைக் கண்டு பிடித்தார் வெங்கட்டர். வீட்டின் வாசலின் நின்று கொண்டு, கதவு எண்களை சரி பார்த்துக்கொண்டார்.

நேரமோ.. நடு நிசியை நெருங்கிக்கொண்டிருந்தது. கதவைத் தட்டுவதில் கொஞ்சம் தயக்கம் காட்டினார் வெங்கட்டர். அவருடன் இருந்தவர்கள் பரவாயில்லை கதவைத் தட்டுங்கள் என்று சொன்னார்கள்.

வேறு வழி தெரியவில்லை. தான் தேடி வந்தது ராமசாமியைப் பார்க்க.. அவன் கிடைத்தால் போதும்.. கதவைத் தட்டினார். பதில் இல்லை. மீண்டும் பலங்கொண்டு கதவைத்தட்டினார்.

மொட்டைத் தலையில் கொஞ்சமாய் முடி வளர ஆரம்பித்த நிலையில் இருந்த ராமசாமி கதவைத்திறந்தார். அப்பாவை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து நிற்க, வெங்கட்டரோ.. ‘பிள்ளைவாள் இருக்காரா.., எங்கே என் பிள்ளை.. பிள்ளைவாள்.. பிள்ளைவாள்..’ என்று சத்தம் கொடுத்தபடியே ராமசாமியை தள்ளிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். சத்தம் கேட்டு வெளியே வந்த சுப்பிரமணியத்துக்கும்

வெங்கட்டரைப் பார்த்ததும் மர்மாக இருந்தது. ‘வாங்க..வாங்க..’ என்று வாய் வரவேற்றாலும் மனதில் குழப்பங்கள் அதிகமானது. யார் சொல்லி வந்திருப்பார்? ராமசாமி இங்கிருப்பது எப்படி இவருக்கு தெரியும்? தான் தகவல் கொடுத்ததாக ராமசாமி தன்னை தவறாக நினைப்பாரோ? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

‘உட்காருவது இருக்கட்டும்.. மொதல்ல என் பையன் ராமசாமி இங்கிருக்கான்னு தகவல் கிடைச்சதே.. அவனைக் கூப்பிடுங்கோ.. நான் பார்க்கனும்..’

சுப்பிரமணியத்துக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. அவரின் அருகிலேயே தலை குனிந்து நிற்கும் மகனை அடையாளம் காணமுடியாதவராக வெங்கட்டர் இருந்தார். இவர்கள் இருவரின் அமைதி வெங்கட்டருக்கு சற்று எரிச்சலைத் தந்தாலும், வெளிக்காட்டாமல், ‘பிள்ளைவாள்.. பையனை கூப்பிடுங்கோ.. அவனைப் பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்.. இப்படியே அமைதியா இருந்தா எப்படி..? ராமசாமீ.. ராமசாமீ.., வெளியில வாப்பா..” என்று குரல் கொடுத்தார் வெங்கட்டர்.

சுப்பிரமணியம் ராமசாமியின் முகத்தைப் பார்த்தார். இனிமேலும் அமையாக நிற்பது சரியல்ல என்று முடிவு செய்த ராமசாமி ஒரு அடி முன் வந்து நின்றார். இவர்களின் செயல்கள் வெங்கட்டருக்கு விளங்க வில்லை. ‘நைனா.. நான் தான் நைனா..’ என்று ராமசாமி.. சொன்னது தான் தாமதம்.. வெங்கட்டருக்கு குரல் அடையாளம் தெரிந்தது. அதுவரையிலும் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அனைத்தும் கண்ணீராக வெளிவந்தது. ஆசையாக மகனை இறுக்கித் தழுவிக்கொண்டார். தந்தையின் பாசமும், கண்ணீரும் ராமசாமியின் கண்களையும் ஈரமாக்கியது.

தந்தையும் மகனும் இணைந்தது சுப்பிரமணியத்திற்கு நிம்மதியைக் கொடுத்தது. வெங்கட்டரை வீட்டுக்குள் அழைத்துச்சென்று அமர வைத்தார். பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.


பெரியார் சில சம்பவங்கள்…

குத்தூசி குருசாமி விடுதலையில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம். பெரியாரிடம் வந்தார் குத்தூசி, ‘அய்யா.. இன்னைக்கு செய்தி போடுவதற்கு ஏதும் சிறப்பான செய்தி இல்லையே என்ன செய்யலாம்? என்று கேட்டாராம்.

‘இவ்வளவு தானா… காலையில வந்த ‘இந்து’ பத்திரைக்கையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எது எல்லாம் சரி என்று வந்திருக்கிறதோ.. அந்த கட்டுரைகள் அனைத்தும் தவறு என்று பதில் எழுதுங்கள். எது எல்லாம் தவறு என்று வந்திருக்கிறதோ.. அந்த கட்டுரைகள் எல்லாம் சரி என்று பதில் கட்டுரை எழுதுங்கள்.’ என்றாராம் பெரியார்.

அடுத்த நாளே கிளம்புவது என்பது வெங்கட்டரின் எண்ணம், ஆனால் சுப்பிரமணியோ சில நாட்கள் தங்கிவிட்டுப் போகும் படி வேண்டிக் கொண்டார். ராமசாமியின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. அப்போது தான் ஐத்ராபாத்தில் இருக்கும் நகைகளை வர வைக்க முடியும். அப்பாவையும், உடன் வந்தவர்களையும் படுக்க வைத்து விட்டு, சுப்பிரமணியத்திடம் வந்து ஐத்ராபாத் முருகேச முதலியாருக்கு தந்தி கொடுத்து தாம் கொடுத்துவிட்டுப் போன நகைகளை அனுப்பி வைக்கும் படி ஒரு தந்தி அனுப்பச் சொன்னார்.

சுப்பிரமணியமும் அதன் படி செய்ய, முருகேச முதலியார் தன் வேலையாள் மூலம் நகைகளை ஒரு பெட்டியில் போட்டு கொடுத்து அனுப்பினார். அந்த நகைப்பெட்டியை வெங்கட்டரிடம் கொண்டுவந்து கொடுத்தார் ராமசாமி.

இத்தனை நாட்களின் தம் மகன், நகைகளை விற்றுத்தான் ஊர்சுற்றி, சாப்பிட்டு இருப்பான் என்று நினைத்துக்கொண்டிருந்த வெங்கட்டருக்கு நகைகளைக் கண்டதும் வியப்பு ஏற்பட்டது.

‘ராமசாமி… என்னப்பா.. இது.. நகை எல்லாம் அப்படியே இருக்கு போலிருக்கே…, அப்ப இத்தனை நாள் சாப்பாட்டுக்கு என்னப்பா செய்தாய்?’ என்று கேட்டார் வெங்கட்டர். ‘ஈரோட்டில் நீங்கள் போட்ட அன்ன தானங்களை எல்லாம் காசியில் வசூலித்தேன் அப்பா’ என சிரித்த படியே விளக்கிச் சொன்னார் ராமசாமி. காசியில் அவர் செய்திருந்த கலாட்டாக்களைக் கேட்ட எல்லோரும் சிரித்தனர். வெங்கட்டருக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், ராமசாமி பட்ட துயரங்களை நினைத்தால் துக்கமாக இருந்தது.

எல்லா நகைகளையும் திரும்பக்கொடுத்து அணிந்துகொள்ளச்சொன்னார் வெங்கட்டர். ராமசாமியோ மறுந்தார். நகைகளை விற்றுத்தான் இத்தனை நாள் சாப்பிடிருப்பான் என்று ஊரில் இருக்கும் மற்றவர்கள் கருதாமல் இருக்கவாவது நகைகளை அணிந்துகொள் என்று வற்புறுத்தி அணிந்து கொள்ளச் சொன்னார். வெங்கட்டரின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்டு, நகைகளை அணிந்துகொண்டார் ராமசாமி.

எல்லோரும் எல்லூரை விட்டு சென்னை வழியாக ஈரோடு வந்து சேர்ந்தார்கள். வீட்டில் ஏக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. வந்திறங்கிய சில தினங்களிலேயே ராமசாமிக்கு பொறுப்பு வரவேண்டும் எனில் ஏதாவது பெரிய பொறுப்பு கொடுக்க எண்ணினார் வெங்கட்டர்.

சின்னதாய்யம்மையாரிடம் கலந்து பேசி, ‘வெங்கட்ட நாயக்கர் மண்டி’ என்றிருந்த பெயரை ‘ஈ.வெ.ராமசாமி மண்டி’ என்று பெயர் மாற்றி, கடையின் சாவியை ராமசாமியின் கையில் ஒப்படைத்தார் வெங்கட்டர்.


ஈ.வெ.ரா.வின் தனித்துவமாக உருப்பெற்றது அப்போது தான். கடைப் பொறுப்புக்கு வந்த பின் ஈ.வெ.ரா.வின் போக்கில் நிறைய மாற்றம் கண்டார் வெங்கட்டர். மண்டியை மகனுக்கு கொடுத்து விட்டாலும் தினமும் மண்டிக்கு வந்து சிறிது நேரம் இருந்து விட்டு போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் வெங்கட்டர். வியாபாரத்தில் ஈ.வெ.ரா.வின் நுட்பம் கண்டு வியந்தார்.

ஈ.வெ.ரா. பொறுப்பு ஏற்றபின் வியாபாரம் முன்பை விட சூடு பிடிக்கத்தொடங்கி இருந்தது. தோற்றத்திலும் ஈ.வெ.ரா மாறிப் போயிருந்தார். முறுக்கிவிட்ட மீசையும், தலையும் தலைப்பாகையுமாய் பணக்கார வியாபாரிகளுக்கான அடையாளத்திலிருந்தார். புதிது புதிதாக வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினார்கள். எல்லோரின் கணக்கு களையும் வெங்கட்டர் போல, தனி நோட்டு போட்டு எழுதாமல், துண்டுத் துண்டான காகிதங்களை- லேயே எழுதி வைத்திருந்தார் ஈ.வெ.ரா. அவரவர்க்கான கணக்கு பார்க்கும் போது சிரமமின்றி துண்டு காகிதத்தை எடுத்து சரி பார்த்துக்கொண்டார். கணக்கு நேர் செய்பப்பட்டவுடன் வாடிக்கையாளரின் முன்னாலேயே அவரின் கணக்குத் துண்டுப் பேப்பரை கிழித்துப் போட்டு விடுவார்.

வியாபரம், தன் குடும்பம் என்று மட்டும் இருந்து விடாமல். ஊரின் விசயங்களிலும் அக்கரை காட்டினார் ஈ.வெ.ரா. அவரின் சமயோசிதம், வழக்குகளில் சரியான தீர்ப்பு வழங்கும் முறையால்.. அவரின் புகழ் பரவத்தொடங்கியது. ஒரு வியாபாரியாக மட்டுமல்லாது, சமூக அக்கரையுள்ள மனிதனாகவும் அறியப்பட்டார்.

மகனின் வளர்ச்சி கண்டு பூரித்துப் போன வெங்கட்டர், இனி நிம்மதியாக ஆன்மீகத்தில் கவனம் செலுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தவராய்.., மண்டிப் பக்கம் வருவதை குறைத்து, பூஜை, பஜனை என்று ஈடுபடலானார்.

(தொடரும்)

*Download As PDF*